திருமுழுக்கு

குரு: உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்?

பெற்: ………… என்ற பெயரிட விரும்புகிறோம்.

குரு: (பெயர்) க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன?

பெற்: திருமுழுக்கு

குரு: உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து, கிறிஸ்து நமக்கு கற்பித்தது போல், இறைவனுக்கும், தங்கள் அயலாருக்கும் அன்பு செய்து வாழ அவர்களை விசுவாசத்தில் வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இதை உணர்ந்திருக்கிறீர்களா?

பெற்: உணர்ந்திருக்கிறோம்.

குரு: ஞானத்தாய் தந்தையரே, இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் உதவி புரிவீர்களா?

பெற்: உதவிபுரிவோம்.

குரு: (பெயர் ……………….) (அல்லது குழந்தைகளே) கிறிஸ்தவ சமூகம் உங்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உங்கள் மீது சிலுவை அடையாளம் வரைகிறேன். பின்னர் உங்கள் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் மீட்பராம் கிறிஸ்துவின் அடையாளத்தை உங்கள் மீது வரைவார்கள்.

(குரு மௌனமாக குழந்தையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைய, தொடர்ந்து பெற்றோரும், ஞானப் பெற்றோரும் அவ்வாறே செய்கின்றனர்)

இறைமக்களின் மன்றாட்டு

குரு: அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கின் அருளைப் பெற இருக்கும் இக்குழந்தை(களு)க்காகவும், இவர்களுடைய பெற்றோர், ஞானத்தாய் தந்தையருக்காகவும் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்காகவும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை இறைஞ்சுவோமாக!

குரு: உம்முடைய இறப்பு, உயிர்ப்பு என்னும் ஒளிவீசும் தெய்வீக மறைபொருளால் திருமுழுக்கின் வழியாக இக்குழந்தைகள் மறுபிறப்பு அடைந்து திருச்சபையில் சேர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக இவர்கள் விசுவாசமுள்ள சீடர்களாகவும், உமது நற்செய்தியின் சாட்சிகளாகவும், விளங்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: தூய ஆவியாரின் வழியாக இவர்களை விண்ணரசின் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இக்குழந்தைகளுக்கு விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: இவர்களுடைய குடும்பங்களை உமது அன்பில் என்றும் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: எங்கள் அனைவரிடமும் திருமுழுக்கின் அருளைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதர்களை நோக்கி மன்றாட்டு

குரு: 1. இறைவனின் அன்னையாம் புனித மரியாயே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

2. புனித சூசையப்பரே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

3. புனித ஸ்நானக அருளப்பரே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

4. புனித இராயப்பரே, சின்னப்பரே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

5. புனித தோமையாரே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

6. புனித சவேரியாரே,

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(கடைசியாக) இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே.

எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ங்கள்

பேய் ஓட்டும் செபம்

குரு: என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, தீமையின் ஆவியான சாத்தானின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றவும், இருளிலிருந்து மனிதனை விடுவித்து, உமது ஒளியின் வியத்தகு அரசில் கொண்டுவந்து சேர்க்கவும், உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். இக்குழந்தைகளை சென்மப் பாவத்திலிருந்து மீட்டு உமது மாட்சியின் ஆலயமாக்கி, இவர்களில் தூய ஆவி குடிகொள்ளச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

ஆயத்த எண்ணெய் பூசுதல்

குரு: உங்கள் மீது இயேசு கிறிஸ்துவின் அடையாளம் வரைந்து மீட்பின் எண்ணெய் பூசுகின்றோம். நம் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் ஆற்றல் உங்களைத் திடப்படுத்துவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

திருமுழுக்கு விழா

முன்னுரை

குரு: அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தைகளுக்கு நீரினாலும், தூய ஆவியாரால் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.

நீரின் மீது ஆசியுரை

பாஸ்கு காலத்திற்குப் புறம்பே

குரு: இறைவா, அருளடையாளங்கள் வியத்தகு முறையில் பயனளிக்கக் கண்ணுக்குப் புலப்படாத வலிமையால் செயலாற்றுகின்றீர்: திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்டப் இப்புனிதப் பொருளாகிய தண்ணீரைப் பல வகையில் தயார் செய்தீர்; இறைவா, தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு உலகின் தொடக்கத்திலேயே உமது ஆவியார் அதன் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.

இறைவா, பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாளமாக்கி, மறைபொருளாகிய அதே தண்ணீரால் குற்றங்கள் முடிவுறவும் நற்பண்புகள் தொடங்கவும் செய்தீர்; இறைவா, பார்வோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து, திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்; இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவானால் திருமுழுக்குப் பெற்று, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டார்; சிலுவையில் அவர் தொங்கியபொழுது, தமது விலாவிலிருந்து இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்; தமது உயிர்ப்புக்குப்பின் “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாருக்கும் கற்பித்து தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்’ என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்; உமது திரு அவையைக் கண்ணோக்கி, அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்; இந்தத் தண்ணீர் உம் ஒரே திருமகனின் அருளைத் தூய ஆவியாரினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்; இவ்வாறு உமது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் திருமுழுக்கு அருளடையாளத்தினால் பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று, தண்ணீராலும் தூய ஆவியாராலும் புதுப் பிறப்பு அடைந்து எழும் தகுதி பெறுவார்களாக.

(குரு வலது கரத்தால் நீரைத் தொடுகிறார்)

ஆண்டவரே, இந்தத் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதிலும் தூய ஆவியாரின் ஆற்றல் உம் திருமகன் வழியாக இறங்க உம்மை வேண்டுகின்றோம்.இவ்வாறு திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழ வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல்: ஆமென்.

பாஸ்கு காலத்தில்

மந்திரிக்கப்பட்ட நீர் இருப்பினும்

குரு:  1. இரக்கம் மிகுந்த தந்தையே, உம் மக்களுக்குரிய் புதுவாழ்வு திருமுழுக்குத் தொட்டியிலிருந்து எம்மில் பொங்கி வழியச் செய்தீர்.

எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.

2. நீரினாலும், தூய ஆவியாராலும் திருமுழுக்குப் பெற்றவர் அனைவரும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவில் ஒரே மக்களாக ஒன்று சேர்ந்தருளுவீர்.

எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.

3. நாங்கள் உமது சமாதானத்தைப் பெற்று மகிழும்படி எங்கள் இதயங்களில் உமது அன்பின் ஆவியாரைப் பொழிந்து எங்களை மீட்கின்றீர்.

எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.

4. எல்லா இனத்தவர்க்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்க திருமுழுக்குப் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்.

எல்: இறைவா, உம்மை வாழ்த்துகின்றோம்.

குரு: முடிவில்லா வாழ்வு பெற உம் அடியார்கள் இவர்களைத் திருச்சபையின் நம்பிக்கையால் புதுப் பிறப்பைத் தரும் திருமுழுக்கிற்கு அழைத்துள்ளீர்.

புனிதப்படுத்தப்பட்ட இந்த நீரின் மறைபொருளினால் இவர்களை ஆன்ம மறுபிறப்பிற்குக் கொண்டு சேர்த்தருள(அல்லது நீர் புனிதப்படுத்தப்பட வேண்டுமாயின்; இவர்கள் திருமுழுக்கு அளிக்கப் பயன்படும் இந்த நீரை இப்பொழுது ஆசீர்வதித்தருளும்) எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

அறிவுரை

குரு: அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, ஞானஸ்நானம் எனும் திருவருட்சாதனம் வழியாக நீங்கள் ஒப்புக்கொடுத்த இக்குழந்தைகள் அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், ஆவியினாலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்கள். இவர்களில் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவர்களை நீங்கள் விசுவாசத்தில் வளர்க்க முயல வேண்டும்.

ஆகவே. உங்கள் விசுவாசத்தினால் தூண்டப்பெற்று, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் உங்கள் திருமுழுக்கை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள்; இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுங்கள். அதுவே திருச்சபையின் விசுவாசம்; அதிலேதான் குழந்தைகள் திருமுழுக்கு பெறுகின்றனர்.

சாத்தானை விட்டுவிடுதல்

குரு: இறைமக்களுக்குரிய சுதந்திரத்துடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?

எல்: விட்டுவிடுகிறேன்.

குரு: பாவம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?

எல்: விட்டுவிடுகிறேன்.

குரு: பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?

எல்: விட்டுவிடுகிறேன்.

நம்பிக்கை அறிக்கை

குரு: விண்னையும், மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகிறீர்களா?

எல்: நம்புகிறேன்.

குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறீர்களா?

எல்: நம்புகிறேன்.

குரு: தூய ஆவியாரையும், தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவமன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், முடிவில்லா வாழ்வையும் நம்புகிறீர்களா?

எல்: நம்புகிறேன்.

குரு: இதுவே நமது நம்பிக்கை. இதுவே திருச்சபையின் நம்பிக்கை. இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.

எல்: ஆமென்.

திருமுழுக்கு அளித்தல்

குரு: ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருச்சபையின்; நம்பிக்கையில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

பெற். & ஞானப்.: விரும்புகிறேன்

குரு: (மும்முறை தண்ணீர் ஊற்றி) தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.

திருத்தைலம் பூசுதல்

குரு: நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், தூய ஆவியாராலும் உங்களுக்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உங்கள் மீது மீட்பின் எண்ணெய் பூசுகிறார். எனவே, நீங்கள் இறைமக்களோடு இணைக்கப்பெற்று, குருவும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, முடிவில்லா வாழ்வு பெறுவீர்களாக.

(பிறகு குரு கிறிஸ்மா (Chrisma) எனும் திருத்தைலத்தை திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் மௌனமாகப் பூசுகிறார்.)

வெண்ணிற ஆடை அணிவித்தல்

குரு: (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீங்கள் புதுப்படைப்பாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உங்கள் உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீங்கள் உதவிபெற்று, இதை மாசுபடாமல் முடிவில்லா வாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்களாக.

எல்: ஆமென்.

எரியும் திரி கொடுத்தல்

குரு: (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு:) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

(குழந்தை(களி)ன் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றனர்)

குரு: பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தைகள் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. நம்பிக்கையில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா

திறக்கப்படு

குரு: செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.

எல்: ஆமென்.

(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருட்கள் எடுத்துச்சென்று குருவிடம் அளிக்கலாம்)

இயேசு கிறிஸ்து கற்பித்த செபம்

குரு: அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் மக்களென அழைக்கப்படும், இறைவனின் மக்களாகவே இருக்கும் இக்குழந்தைகள் உறுதிபூசுதலால் பரிசுத்த ஆவியாரின் நிறைவைப் பெறுவார்கள். ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்கள். திருச்சபையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்கள். நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்பித்தது போல் இக்குழந்தைகளின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து செபிப்போம்.

எல்: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் – ஆமென்.

ஆசியுரை

குரு: எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் கன்னிமரியிடமிருந்து பிறந்த தம் திருமகன் வழியாக குழந்தைகள் மீது ஒளிரும் நித்திய வாழ்வின் நம்பிக்கையால் கிறிஸ்தவத் தாய்மார்களை மகிழ்விக்கின்றார். அவரே, இக்குழந்தைகளின் தாய்மார்களை ஆசீர்வதிப்பாராக. தாங்கள் பெற்றெடுத்த மக்களுக்காக இப்பொழுது நன்றிசெலுத்தும் இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் எக்காலமும் நன்றி செலுத்துவார்களாக.

எல்: ஆமென்.

குரு: மண்ணக வாழ்வையும், விண்ணக வாழ்வையும் வழங்கும் எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் இக்குழந்தைகளின் தந்தையரை ஆசீர்வதிப்பாராக. இதனால் இவர்கள் தத்தம் மனைவியருடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தம் மக்கள் முன் சொல்லாலும், முன்மாதிரியாலும் விசுவாசத்தின் முதற்சாட்சிகளாய் விளங்குவார்களாக.

எல்: ஆமென்.

குரு: நாம் முடிவில்லா வாழ்வுபெற நீரினாலும், தூய ஆவியினாலும் நமக்கு மறுபிறப்பளித்த எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் தம் விசுவாசிகளாகிய இந்த ஞானப் பெற்றோர்க்கு (இவர்களுக்கு) நிறை ஆசீர் அளிப்பாராக. இதனால், இறைமக்களிடையே இவர்கள் என்றும் எங்கும் உயிராற்றல்மிக்க உறுப்பினர்களாய்த் திகழ்வார்களாக. இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தமது சமாதானத்தை வழங்குவாராக.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy